புது தில்லி: சிபிஐ அதிகாரிகள் நாளை, எனது வங்கிப் பெட்டகத்தை ஆய்வு செய்யவிருக்கிறார்கள் என்றும், ஆனால் அதில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சோதனையும் நடத்தியிருந்தது.
இதையும் படிக்க.. ஆசிரியர் இல்லா கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: தமிழகத்துக்கு முதலிடம்
இந்த நிலையில், நாளை, சிபிஐ அதிகாரிகள், எங்களது வங்கிப் பெட்டகங்களைத் திறந்து அதில் என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்யவிருக்கிறார்கள். கடந்த 19ஆம் தேதி எனது வீட்டில் 14 மணி நேரம் நடைபெற்ற மிக நீண்ட தேடுதலில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாளை வங்கிப் பெட்டகத்திலும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. சிபிஐ அதிகாரிகளை வரவேற்கிறேன்.
நானும் எனது குடும்பமும் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று துணை முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.