ஒற்றுமைப் பயணத்தின் 100வது நாள்! கச்சேரியுடன் விழாவுக்கு ஏற்பாடு
காங்கிரஸ் ஒற்றுமைப் பயணத்தின் 100வது நாளையொட்டி இசைக்கச்சேரியுடன் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திரைப்பட பின்னணி பாடகி சுனிதி செளஹானின் கச்சேரி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைப் பயணம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் ஒற்றுமைப் பயணம் நிறைவு பெறுகிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த ஒற்றுமைப் பயணத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிசம்பர் 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைப் பயணம் 100வது நாளை எட்டுகிறது. இது ஒற்றுமைப் பயணத்தின் மைல் கல் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒற்றுமைப் பயணம் நடைபெற்று வருகிறது. 17 நாள்களில் அங்கு 500 கிலோமீட்டருக்கு ஒற்றுமைப் பயணம் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் நடைப்பயணத்தின் நூறாவது நாளையொட்டி ஜெய்ப்பூரில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னணி பாடகி சுனிதி செளஹானின் நேரலை இசைக்கச்சேரி இடம்பெறவுள்ளது. அன்றைய நாளில் பிற்பகல் 1 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஆல்வார் பகுதியில் டிசம்பர் 16ஆம் தேதி மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.