2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளர் அல்ல என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், 2025ஆம் ஆண்டு பிகாரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை தற்போது துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி யாதவ் வழிநடத்துவார் எனவும் குறிப்பிட்டார்.
7 கூட்டணி கட்சிகள் இணைந்த மகா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் நிதீஷ்குமார் பேசியதாவது, 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நான் அல்ல. 2024 தேர்தலில் தில்லியிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறேன்.
2025ஆம் ஆண்டு நடைபெறும் (பிகார்) சட்டப்பேரவைத் தேர்தல் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடைபெறும். அவரே அனைவரையும் வழிநடத்துபவராகவும் இருப்பார் எனக் குறிப்பிட்டார்.