இந்திய - சீன வீரர்கள் மோதல்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி
அருணாசல பிரதேச எல்லையில் இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற அவைகளில் இதுகுறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்றும் இந்திய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.
மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அருணாசல் எல்லையில் இந்திய, சீனப் படைகள் மோதல்
இந்நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்களை உடனடியாக ஒத்திவைத்துவிட்டு எல்லைப் பிரச்னை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அவைகளில் விவாதம் நடத்த வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பத் தொடங்கினர்.
மக்களவையில் பகல் 12 மணிக்கும் மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பிரச்னை குறித்து விளக்கம் அளிப்பார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளையும் பகல் 12 வரை ஒத்திவைத்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.