தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படகு கவிழ்ந்ததில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவம் அசாமில் நிகழ்ந்துள்ளது. அசாமின் மோரிகயோன் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியில் படகில் பயணம் மேற்கொண்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: நாட்டுப் படகில் 7 பேர் பிரம்மபுத்திரா நதியில் பயணம் செய்துள்ளனர். இந்தப் படகு மற்றொரு இயந்தியரப் படகின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து நதியில் கவிழ்ந்தது. இயந்திரப் படகில் வேகமாக மோதியதால் நாட்டுப் படகில் உள்ள அனைவரும் விழுந்துள்ளனர். அதில் 4 பேர் நீந்தி பத்திரமாக கரைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், 3 பேர் துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இறந்தவர் பிம்லா கட்டுன் என்ற பெண் மற்றும் அவரது மகன் ஜின்னாத்துல் இஸ்லாம் மற்றும் மகள் இஸ்தாரா கட்டுன் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது என்றனர்.