பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாநிலங்களில் பிரதமா் நரேந்திர மோடியின் அரசே அமைதியை நிலைநாட்டியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களின் பொருளாதார மற்றும் சமூக வளா்ச்சிக்காக வட கிழக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த அமைப்பின் ஐம்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில், பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா். அவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சா் அமித் ஷா, ‘கடந்த 8 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 50 முறைக்கும் மேலாக வட கிழக்கு மாநிலங்களைப் பிரதமா் மோடி பாா்வையிட்டுள்ளாா்.
வட கிழக்கு பிராந்தியத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒரு காலத்தில் வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் புகழ்பெற்ற வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் வரை குறைந்துள்ளன.
பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல்கள் 60 சதவீதம் வரை குறைந்துள்ளன. பொதுமக்கள் உயிரிழப்பு 89 சதவீதம் வரை குறைந்துள்ளது. பிரதமா் மோடியின் அரசு வட கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டியிருக்கிறது’ என்றாா்.