கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7, பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத், ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசும் மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிக்க | கரோனா பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு: பிரதமா் மோடி அறிவுறுத்தல்
இதுகுறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் எனும் கரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.