புது தில்லி: தில்லியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் களைகட்டியிருக்கிறது. ராகுல் காந்தியுடன் சோனியா மற்றும் பிரியங்காவும் நடைப்பயணத்தில் சிறிது நேரம் கைகோர்த்து நடந்தனர்.
இன்று காலை 8.30 மணியளவில், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஹரியானா மாநிலத்தின் பதர்பூர் எல்லையிலிருந்து தில்லிக்குள் நுழைந்தது. அப்போது, தனியார் மருத்துவமனையை நடைப்பயணம் எட்டிய போது, மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸைப் பார்த்த ராகுல் காந்தி, ஆம்புலன்சுக்கு வழிவிடும் வகையில், தனது நடைப்பயணத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்தார். ஆம்புலன்ஸ் எந்தத் தடையும் இல்லாமல் மருத்துவமனைக்குள் நுழைந்த பிறகே, நடைப்பயணம் தொடங்கியது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று தலைநகர் தில்லிக்குள் நுழைந்தது.
தில்லியில், ராகுல் காந்தியுடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஏராளமான மக்களும் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டனர். சோனியாவும், பிரியங்கா காந்தியும், நடைப்பயணத்தில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் சிறிது நேரம் நடந்து வந்தனர்.
இதற்கு முன்பும், ஒற்றுமை நடைப்பயணம் கர்நாடகத்தில் நடந்து கொண்டிருந்த போதும், ராகுல் காந்தியுடன் சோனியாவும் இணைந்து கொண்டார். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான போட்டி என்று தில்லியில் நடைப்பயணத்தைத் தொடங்கிய போது பாஜகவை கடுமையாக விமரிசித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
அதேவேளையில், நடைப்பயணம் தில்லிக்குள் நுழைந்ததால், அங்கு போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது. நடைப்பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் சாலைகள் குறித்து தில்லி போக்குவரத்துக் காவல்துறை நேற்றே மக்களுக்கு தகவல் அளித்து மக்கள் மாற்றுப் பாதைகளை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிக்க.. 2 ஆண்டுகளாக இருக்கும் பிஎஃப்.7 திரிபை திடீரென பூதாகரமாக்குவது ஏன்?
இந்த நடைப்பயணத்தின் போது, அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், மக்களுக்கு நன்கு தெரிந்த ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும், தங்களது ஆதரவை ராகுலுக்கு அளிக்கும் வகையில் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களைக் கடந்து இப்போது புது தில்லியை எட்டியுள்ளது.