சென்னை: சீனாவில் தற்போது கரோனா பாதிப்பு தீவிரமாகக் காரணமாக இருக்கும் பிஎஃப்.7 வகை ஒமைக்ரான் திரிபு வைரஸ் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உலகின் 91 நாடுகளில் பரவியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் அரிதான வைரஸாக இருந்தாலும், இதுவரை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத ஒமைக்ரான் வகை திரிபாகவே பிஎஃப்.7 உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் முதல் முறை.. தாயிடமிருந்து கருப்பை தானம் பெற்ற மகள்கள்!
இதுவரை 91 நாடுகளில் நடத்தப்பட்ட கரோனா வைரஸ் மரபணு வரிசை மாற்ற சோதனையில் பிஎஃப்.7 வகை மற்றும் அதனை ஒத்த திரிபு வைரஸ்கள் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கண்டறியப்பட்டு வருகின்றன.
ஆனால், திடீரென பிஎஃப்.7 வகை திரிபை இந்த அளவுக்குப் பெரிதுப்படுத்தக் காரணம் என்ன என்பதை விஞ்ஞானிகளால் யூகிக்க முடியவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் இருந்து எடுக்கப்பட்ட கரோனா மாதிரி பரிசோதனையில் 0.5 சதவீதம் பேருக்கு பிஎஃப்.7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதிக்குப் பிறகு 47,881 பேருக்கு இந்த தொற்று பாதித்துள்ளது.
சுமார் 22 மாதங்களாக இது உலகம் முழுவதையும் சுற்றிக் கொண்டிக்கிறது. ஒமைக்ரான் வகையின் திரிபான எக்ஸ்எக்ஸ்பி உள்ளிட்ட பல்வேறு வகையான அச்சுறுத்தும் வைரஸ்களைக் காட்டிலும் இது அவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் அச்ச உணர்வு தேவையற்றது என்றே நிபுணர்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வளவையும் விஞ்ஞானிகளும், நிபுணர்களும் தெளிவுபடுத்தும் போது, ஏன் இந்த அளவுக்கு பதற்ற நிலை உருவாக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, சீனாவே காரணமாக உள்ளது. ஆனால், அங்கு இந்த வகை வைரஸ் அதிகம் பரவி வருகிறது என்றால் அதற்குக் காரணங்களாக இருப்பவை, சீனாவில் பயன்படுத்தப்பட்ட குறைந்தசெயல்திறன்கொண்ட தடுப்பூசிகளும், அதையும் மிகக் குறைவானவர்களே போட்டுக்கொண்டதும், பூஜ்ய கரோனா கட்டுப்பாட்டை சீனா திடீரென விலக்கிக் கொண்டதும் தான் காரணங்களாக இருக்கலாம் என்று நாம் கணிக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஒரு விஷயம் மட்டும் இங்கே கவனிக்கத்தக்கது, நம்மை விட்டு கரோனா ஒழிந்துவிடவில்லை. அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியதும், அதனை எதிர்கொள்ள எப்போதும் திட்டங்கள் இருப்பதும் அவசியம் என்பதே அது.