குப்பையை தரம் பிரிக்கத் தவறிய மேற்கு வங்க அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் விதிக்கப்பட்ட இந்த உத்தரவைத் தொடர்ந்து மேற்கு வங்க அரசு தற்போது அபராதத் தொகையை செலுத்தியுள்ளது.
ராஜ்ஸ்தான் போன்ற பிற மாநிலங்களுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பொதுமக்களால், ஆலைகளால் இன்ன பிற வகைகளில் உருவாகும் கழிவுகளை அரசு பொறுப்பேற்று உரிய வகையில் அகற்றி வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. அந்தவகையில், மேற்கு வங்க அரசு திட மற்றும் திரவக் கழிவுகளை பிரித்து தனித்தனியாக வகைப்படுத்தி அப்புறப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டுள்ளது.
திட மற்றும் திரவக் கழிவுகளை தரம் பிரித்து அப்புறப்படுத்துவதில் கவனக்குறைவாக செயல்பட்டதால், நகர மேம்பாடு மற்றும் மாநகராட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகையை அபராதமாக செலுத்த கடந்த நவம்பர் 1ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டது.
மாநில தலைமை செயலாளரிடம் தேசிய பசுமைத் தீர்பாயம் வழங்கிய அறிக்கையில், மேற்கு வங்கத்தில் ஒருநாளுக்கு 13,469 டன் கழிவுகள் உருவாகின்றன. அதில், 5,994 டன் கழிவுகள் தரம் பிரிக்கப்படுகின்றன. 3,047 டன் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள 10,422 டன் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலே விடப்படுகிறது.
காற்று, நீர் மற்றும் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு தரம் பிரிக்காமல் கொட்டப்படும் கழிவுகளே மூலக்காரணம் என்பதை தேசிய பசுமைத் தீர்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆறு மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.