பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை(டிச.25) 96 ஆவது 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதில் அந்த மாதம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், சாமானிய மக்களின் சாதனைகள், நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்பட பல்வேறு கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.25) காலை 11 மணிக்கு மனதின் குரல் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார். இது 96 ஆவது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஆகும்.
இந்த நிகழ்ச்சியில், பரவி வரும் புதிய வகை கரோனா மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியின் அடிப்படையில் ஒரு சிறு மின்-புத்தகத்தைப் பகிர்ந்துள்ளேன் வாசித்து மகிழுங்கள் என்று மோடி கூறினார்.
அவா் சனிக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உலகளாவிய நன்மை மற்றும் உலக நலனில் கவனம் செலுத்த ஒரு பெரிய வாய்ப்பு, விண்வெளித்துறையில் நமது தொடர் வெற்றி, இசைக்கருவிகளின் ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய கடந்த மாத ‘மன் கி பாத்’ (நவம்பர் 2022) நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான தொகுப்பை உள்ளடக்கிய ஒரு சிறு மின்-புத்தகத்தை பகிர்ந்துள்ளேன் வாசித்து மகிழுங்கள்." என்று கூறினார்.