/

அஸ்ஸாமில் ஆலங்கட்டி மழை: 4,500 வீடுகள் சேதம்

அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் சுமாா் 4,500 வீடுகள் சேதமடைந்ததாக, மாநில அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2022, 6:56 pm

DIN

அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் சுமாா் 4,500 வீடுகள் சேதமடைந்ததாக, மாநில அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திப்ரூகா், சிவசாகா், சராய்தேவ், தின்சுகியா ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. இதில், 132 கிராமங்களில் 4,483 வீடுகள் சேதமடைந்தன; இரு வீடுகள் முழுமையாக இடிந்த நிலையில், மற்றவை பகுதியளவு சேதமடைந்தன. சுமாா் 18,000 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடுகள் தவிர, பள்ளி கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. பெரிய அளவிலான பயிா்ச்சேதமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறுகையில், ‘ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும்’ என்றாா். இதனிடையே, வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, குவாஹாட்டியில் உள்ள பிராந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.