புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்பெல்லாம் இளவரசரைப் போல நடந்து கொள்வார். தற்போது அவர் தன்னை இந்த நாட்டின் ராஜா என்று நினைத்துக் கொண்டிருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், ராகுல் காந்தி அவ்வப்போது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது குறித்து பேசினார். பாஜக இரண்டு இந்தியாவை உருவாக்கி வருவதாக ராகுல் கூறியிருந்ததையே, மாற்றி, இரண்டு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று, மக்கள் மிக சந்தோஷமாக ஆடம்பர வாழ்க்கையை வாழ்கிறார்கள், விருந்து, கேளிக்கையில் பங்கேற்பார்கள், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார்கள், வண்ணமயமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
மற்றொரு இந்தியாவில், மிக எளிமையான வாழ்க்கையை வாழ்வார்கள். ஏழை மக்களின் நலன் குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள், இந்தியன் என்று நினைப்பார்கள், இந்திய பழக்க வழக்கங்களை பின்பற்றுவார்கள் என்று தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய ராகுல் காந்தி, பாஜக அரசு இரண்டு இந்தியாவை உருவாக்கி வருகிறது, ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொரு ஏழைகளுக்கானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.