ரூ.13.14 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் காா் ஒன்றை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவா் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளாா். இந்தியாவில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட காா்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தால் தெற்கு மும்பையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி இந்த காா் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிவுக் கட்டணமாக மட்டும் ரூ.20 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. ரூ.40,000 சாலைப் பாதுகாப்பு வரியாகும். இது தவிர காருக்கு தனித்துவமான பதிவு எண்ணைப் (0001) பெற ரூ.12 லட்சத்தை அம்பானி செலுத்தியுள்ளாா்.
இந்த காா் ரோல்ஸ் ராய்ஸ் ‘கல்லினன்’ மாடலாகும். எஸ்யுவி வகையைச் சோ்ந்த இந்த காா் மலைப் பகுதி தொடங்கி அனைத்து வகையிலான பாதைகளிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த வகை காரை இந்தியாவில் 2018-இல் அறிமுகம் செய்தது. முகேஷ் அம்பானி வாங்கியுள்ள மூன்றாவது கல்லினன் மாடல் காா் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானிக்கும் உயா் பாதுகாப்பு அம்சங்களுடன் பிரத்யேகமாக ஒரு காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது. மகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாருக்கு கூட அம்பானி சாா்பில் பிஎம்டபிள்யூ மற்றும் மோரிஸ் கராஜ் காா் வழங்கப்பட்டுள்ளன.