மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவது அவசியம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகளின் புன்புலம் இல்லாமல் மாணவர்களின் போராட்டம் இவ்வளவுபெரிதாக வெடிக்க சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் எதிரொலியாக உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கர்நாடகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, அரசியல் கட்சிகளின் ஆதரவால்தான் மாணவர்களின் போராட்டம் பெரிதாகியுள்ளது. மாணவனோ, மாணவியோ எந்தவித அரசியல் கட்சியின் ஆதரவும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடமுடியுமா?.
படிக்க | ஹிஜாப் விவகாரம்: தேசியக் கொடியை இறக்கி, காவிக்கொடியை ஏற்றிய மாணவர்கள் (விடியோ)
அனைத்து மாணவர்களும் பள்ளிக் கல்வித் துறை அல்லது பள்ளி நிர்வாகம் வகுத்துள்ள சீருடையை அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு காக்கப்படுவது அவசியம். மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.