ஹிஜாப் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடியை இறக்கி காவி நிறக் கொடியை பறக்கவிட்ட விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
எனினும் ஹிஜாப் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஷிவமோகா மாவட்டத்தில் கல்லூரி வளாகத்திலிருந்த தேசியக் கொடியை இறக்கி காவி நிறக் கொடியை ஏற்றி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன் விளைவாக அந்த கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.