கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தின் எதிரொலியாக அடுத்த மூன்று நாள்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து மாணவர்களும், அதற்கு ஆதரவு தெரிவுத்து மற்றொரு தரப்பு மாணவர்களும் ஷிவ்மொக்கா, பாகல்கோட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதற்றமான சூழலைத் தவிர்க்கும் வகையில், ஒரு சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் கல்வி நிலையங்களில் பதற்றமான சூழல் நிலவுவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹிஜாப் அணிந்ததால் தனியறை...
பல்வேறு போராட்டத்திற்கு பிறகும், மாணவிகளின் தொடர் கோரிக்கைக்குப் பிறகும், குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் கல்லூரியில் தனியறையில் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.