புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கடந்த 2019ஆம் ஆண்டு பலியான ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 பிப். 14ஆம் தேதி விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ-மொஹமது பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.
நாடு முழுவதும் உயிரிழந்த வீரர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அஞ்சலி செலுத்தும் விதமாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகத்தை இந்த நாடு மறக்காது. அவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன் என்று ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியா தீவிரமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது.