திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்காக இலவச டோக்கன்கள் விநியோகிக்கும் பணி இன்று காலை 9 மணி முதல் திருப்பதியில் மூன்று இடங்களில் தொடங்கியது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று காலை முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இலவச தரிசன டிக்கெட்டுகள், இன்று முதல் திருப்பதியில் அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீனிவாசம் பக்தா்கள் தங்கும் ஓய்வறை, கோவிந்தராஜஸ்வாமி இரண்டாவது மற்றும் மூன்றாவது சத்திரத்தில் உள்ள கவுண்டா்களில் தினசரி, 10,000 என்ற எண்ணிக்கையில் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க.. காதல் மனங்களை இணைக்கும் பாரீஸ் 'லவ் லாக்' பாலம்
மேலும், திருப்பதியில் தேவஸ்தானம் ஏற்படுத்தி வரும் பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுவதற்கு நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கு உதய அஸ்தமன சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமைகளில் உதயஸ்தமன சேவையில் பங்கேற்க ரூ1.50 கோடியும் மற்ற நாட்களில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கு உதயஸ்தமன சேவையில், 20 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு, 5 போ் வீதம் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படும்.
இதுகுறித்த ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்வதற்கு, இன்று காலை, 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை பெற்றுக் கொள்ளும் பக்தா்கள் 16-ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு செல்ல முடியும். தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் கரோனா இரண்டு தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணிநேரத்திற்கு முன்பு எடுத்த பரிசோதனை முடிவின் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் தங்களுடன் கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.