கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது,
மாநிலத்தில் 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக இதுவரை 93 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனைக்காக மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுகாதாரத்துறை டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைய சுகாதாரத்துறைக்கு சுமார் 1 வருடம் மற்றும் 39 நாட்கள் ஆனதாகக் கூறியுள்ளார். கரோனா நெருக்கடியின் உச்சத்தில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியபோது, ஒரு கோடி தடுப்பூசியை எட்டுவதற்கு 109 நாட்கள் ஆனது. இதற்கு தவறான தகவல்தொடர்பு மற்றும் மக்களின் ஒத்துழைப்பின்மையே காரணம்.
அதன்பிறகு, 49 நாட்களில் 2 கோடியை எட்டியதால் தடுப்பூசி இயக்கம் பின்னர் வேகம் பிடித்தது. மேலும், சுகாதாரத்துறை 21 நாட்களில் 1 கோடி தடுப்பூசிகளை இருமுறை செலுத்தி சாதனை படைத்துள்ளது. கடைசிக் கட்டத்தில், 9 கோடி டோஸ்களில் இருந்து 10 கோடியை எட்ட, சுகாதாரப் பணியாளர்களுக்கு 44 நாட்கள் ஆனது.
தடுப்பூசி செலுத்தியமையால், கரோனா மூன்றாவது அலையின்போது மாநிலம் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர். மாநிலத்தில் சமீப காலங்களில் கரோனா பாதிப்பு மூன்று இலக்கங்களாகக் குறைந்துள்ளன. இதனால், மாநிலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக அரசு தளர்த்தியது.
பெங்களூரு நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைந்துள்ளது. அதிகம் தடுப்பூசி செலுத்தியதில் புது தில்லிக்குப் பிறகு (3,11,74,327), இரண்டாவது இடத்தில் உள்ளது பெங்களூரு (2,03,98,325) என்பது குறிப்பிடத்தக்கது.