உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3வது முறையாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஏற்கெனவே இரண்டு முறை ஆலோசனை நடைபெற்றது. அதன் விளைவாக உக்ரைன் எல்லைகளில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.
தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்.
இதில் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே.சிங் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 பிப்ரவரி 28 (இரவு 7 மணி) நிலவரப்படி இதுவரை உக்ரைனில் இருந்து 1,156 பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 விமானங்கள் (மும்பையில் ஒன்று, தில்லியில் நான்கு) வந்துள்ளன.