தில்லியில் கரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலானோருக்கு மருத்துவமனை உதவிகள் அவசியமில்லாத வகையில் லேசான தொற்று மட்டுமே ஏற்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
காணொலி வாயிலாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால் மேலும் கூறியது:
"தில்லியில் நோய்த் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை டிசம்பர் 29-ம் தேதி 2 ஆயிரம் ஆக இருந்த நிலையில், ஜனவரி 1-ம் தேதி அது 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. டிசம்பர் 29 நிலவரப்படி 262 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். ஜனவரி 1 நிலவரப்படி 247 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தில்லியில் 6,600 பேர் நோய்த் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வந்தனர். 1,150 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் இருந்தன.145 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்போது 5 பேர் மட்டுமே வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி 6,360 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 3,100 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான தொற்றுதான் உள்ளது. அவர்களுள் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை உதவிகள் அவசியமில்லை" என்றார்.
நாட்டில் இதுவரை மொத்தம் 1,525 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தில்லியில் மட்டும் 351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.