கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள், வீரா்கள் உள்பட 14 போ் சென்ற ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விபின் ராவத், மதுலிகா உள்பட 14 பேரும் உயிரிழந்தனா்.
இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. முப்படை தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜனவரியில் விமானப்படைத் தளபதியிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இருப்பினும், இதுவரை ஹெலிகாப்டர் விபத்து விசாரணை அறிக்கை குறித்து விமான படை சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த விபத்தானது மனித தவறுனாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ஏற்படவில்லை.
கண்ட்ரோல்ட் பிளைட் இன்டூ தேரையின் (சிஐஎஃப்டி) காரணமாக, நிலப்பரப்பில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, விமானி எந்த தவறு செய்யவில்லை அதேபோல, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் விபத்து ஏற்படவில்லை. விபத்து நடந்த குன்னூர் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் குறைந்ததில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
உலகளவில் விமான விபத்துக்களுக்கு சிஐஎஃப்டி முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இறுதி அறிக்கையின் மூலம் விபத்து குறித்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என விமானப்படை அலுவலர்கள் தெரிவித்தனர்.
விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன், ஆய்வில் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த, கண்டுபிடிப்புகள் சட்டப்பூர்வமாக சரிபார்க்கப்படும். விபத்து நடந்த உடனே ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் "காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்" ஆகியவை கண்டு எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.