வரி செலுத்துவோருக்கு ரூ.1.50 லட்சம் கோடி திருப்பி அளிப்பு
வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை திருப்பி அளித்துள்ளதாக (ரீஃபண்ட்) வருமான வரித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறையின் ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2021 ஏப்ரல் 1 முதல் 2022 ஜனவரி 3 வரையிலான காலகட்டத்தில் ரூ.1,50,407 கோடி மதிப்பிலான தொகையை வருமான வரி திருப்பி அளித்துள்ளது. மொத்தம் 1.48 கோடி பேருக்கு இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.21,323.55 கோடி வழங்கப்பட வேண்டிய 1.1 கோடி ரீஃபண்டுகளும் அடங்கும்.
வருமான வரி ரீஃபண்டாக 1.46 கோடி பேருக்கு ரூ.51,194 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பெருநிறுவனங்களுக்கான வரி ரீஃபண்ட் பிரிவில் 2.19 லட்சம் பேருக்கு ரூ.99,213 கோடியை திருப்பி வழங்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.