உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று சமாஜ்வாதி கட்சி ஆட்சியமைத்தால் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிக்க | நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதி என தகவல்
நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் நாடு முழுவதும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பேரவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளைக் கவர அரசியல் கட்சிகள் போட்டி போட்டிக் கொண்டு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.
இதையும் படிக்க | ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியமைத்தால் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஏற்கெனவே ஸ்மார்ட்போன், டேப்லெட்களை இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது. முன்னதாக அகிலேஷ்யாதவ் விவசாயிகளுக்கு பாசனத்திற்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.