தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கேரளத்தில் நாளை(ஜன.14) பொங்கல் விடுமுறையை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்.
கேரளத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தம்திட்டா, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(ஜன.14) விடுமுறை அளிப்பதாக கேரள அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில், ‘தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளத்தின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14 ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க- புதிய கரோனா பாதிப்பு அதிர்ச்சிதரும் வகையில் அதிகரிப்பு