உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் சார்பில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியில் கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத் கலந்துகொண்டார்.
இதில் பேசிய டிகைத், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிகளுக்கும் ஆதரவு தரப்போவதில்லை என்றூ கூறினார்.
விவசாய சங்கத்தின் தலைமை பொறுப்பை சேர்ந்த மற்றொரு நபரான நரேஷ் டிகைத், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் சமாஜவாதி கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பிறகு சிறிது நேரத்தில் தனது அறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ராகேஷ் டிகைத், விவசாய சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளோம். நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தின்போது லக்கிம்பூர் விவகாரம் தொடர்பான விரிவான விசாரணைக்கு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்திருருந்தது. ஆனால் இன்னும் மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை. மாநில உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா இன்னும் தனது பதவியில் நீடித்து வருகிறார்.
தானியங்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இவைதான் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள். கட்சிக்கு ஆதரவு தருவது குறித்து எந்த விவாதத்திற்கும் இடமில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று கூறினார்.