உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யு) மாணவர்கள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக நட்சத்திர பிரசாரத்தில் ஈடுபடும் 30 பேரின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இணைந்து இணைய வழியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரசியல் பிரசாரங்களுக்கும் பேரணிகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால் அனைத்து பிரசாரங்களையும் இணைய வழியில் மேற்கொள்ள போதிய ஏற்பாடுகளை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.