பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கர்நாடக அதிமுக முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநில அதிமுக சார்பில் பெங்களூரில்ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்த கருத்துக்கேட்புக்கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ். டி. குமார் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மூத்த தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், எந்தெந்த வார்டுகளில் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புள்ளது என்பது குறித்தும் அலசப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் எஸ். டி. குமார் பேசியது: கடந்த காலங்களில் பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட்டுள்ளது. மாமன்றத்தில் அதிகப்பட்சமாக 9 அதிமுக உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அந்தளவுக்கு அதிமுக மக்கள் செல்வாக்கு பெற்றிருந்தது. மீண்டும் அந்த நிலையை உருவாக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இக்கூட்டத்தில் எல்லோரும் கூறிய கருத்துக்களை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரிடம் தெரிவிப்பேன்.
அதிமுக தொண்டர்களின் கருத்துக்களை பரிசீலித்து எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்பதை கட்சி தலைமை அறிவிக்கும். பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி.
இதற்கான அனுமதியை கட்சித்தலைமை வழங்கி உள்ளது. நீங்கள் அனைவரும் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். தேர்தலில் அதிமுக வெற்றி பெற வியூகங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.