புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆதார் விவரங்களை கசிய விட்டால் கடும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களைக் கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2022, 9:55 pm

DIN

வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களைக் கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
 போலியான வாக்காளர் பெயர் பதிவிடுதலைத் தவிர்க்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஜூலை 4ஆம் தேதியிட்ட அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படலாம். எனினும் அவர்கள் தங்கள் ஆதார் எண்களை அளிப்பதை அவர்களின் சுயவிருப்பத்தின்பேரில் மேற்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேவேளையில் ஆதார் எண்ணை வழங்காத காரணத்துக்காக எந்த வாக்காளரின் பெயரையும் வாக்காளர் பதிவு அதிகாரி, பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது.
 எந்தச் சூழ்நிலையிலும் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் பொதுமக்களின் கவனத்துக்குச் செல்லக் கூடாது. ஒருவேளை வாக்காளர்களின் தகவல்களை பொதுவெளியில் வைக்க வேண்டுமானால் ஆதார் விவரங்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது மறைக்கப்பட வேண்டும்.
 ஆதார் எண்களை வாக்காளர்கள் வெளிப்படுத்தக் கூடிய 6பி படிவத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஆதார் நெறிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் 6பி படிவங்கள், ஆதார் எண் பதிவுக்குப் பிறகு வாக்காளர் பதிவு அதிகாரிகளால் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். அந்தப் படிவங்களை பொதுவெளியில் பார்வைக்கு வைத்தால் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.