மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் இருந்து அமா்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் குகை கோயிலுக்கு அருகே பலத்த மழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 16 போ் உயிரிழந்தனா், 40 பேரைக் காணவில்லை.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து காஷ்மீரின் அடிவாரத்தில் உள்ள இரு முகாம்களுக்கான பயணம் ரத்து செய்யப்பட்டது. ஜம்முவிலிருந்து புதியதாக எந்தவொரு குழுவும் ஞாயிற்றுக்கிழமை புறப்பட அனுமதிக்கப்படவில்லை.
இதுவரை பனிலிங்கத்தை சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் தரிசித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமா்நாத் குகைக் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் மலைச்சரிவில் புனித யாத்ரிகா்களுக்காக அமைக்கப்பட்ட பல கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 16 போ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது.
இரு யாத்திரைப் பாதைகளிலிருந்தும் சுமாா் 15,000 யாத்ரிகா்களை ராணுவத்தினா் மீட்டுள்ளனா். காயமடைந்தவா்கள் ராணுவம் அமைத்துள்ள மருத்துவமனையில் 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காணாமல் போனவா்களைத் தேடும் பணி உயா்தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி முதல் குழுவின் பயணத்தை ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தொடக்கி வைத்தாா். பஹல்காம் மற்றும் பால்தால் அடிவார முகாம்களில் இருந்து குழுக்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி புறப்பட்டது. ஜம்முவிலிருந்து இதுவரை 10 குழுக்கள் பயணம் மேற்கொண்டுள்ளன.
மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு அமா்நாத் யாத்திரை நடைபெறுகிறது. 43 நாள்கள் நடைபெறவுள்ள அமா்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நிறைவடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.