நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் தேர்தல், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
இதில், சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், ஊழல், நாடகம், ஒட்டுக்கேட்பு, திறமையற்றவர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குழந்தைத்தனம், குற்றவாளி, கரோனா பரப்புபவர் உள்ளிட்ட வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு ஹிந்தி வார்த்தைகளும் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தால் பயன்படுத்தக் கூடாத பட்டியலில் சேர்க்கப்பட்ட வார்த்தைகளை அவை நடவடிக்கையின் போது உறுப்பினர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் அந்த வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “நாடாளுமன்றத்தில் உள்ள புத்தகத்தை பொறுத்தே அது பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என தீர்மானிக்கிறது. பிரதமர் மோடியின் நாடாளுமன்ற வரலாற்றில் அவர் உபயோகித்த வார்த்தைகளையே நாங்கள் உபயோகிப்போம். அவை விவாதங்களில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை எடுத்துக் கூறுவோம். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏன் தவறு என உணர்கிறார்” எனத் தெரிவித்தார்.