ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து 4,500 பேர் விருப்ப ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம் தன் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதால் தற்போது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் உள்ள கேம்ப்பெல் வில்சன் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார்.
முக்கியமாக, வருகிற 2023 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் செல்லக்கூடிய வகையில் ஏர்பஸ் ஏ350 ஜெட் விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் துவங்க உள்ளது.
இதையும் படிக்க: உலக செல்வந்தர்கள் பட்டியல்: 4-வது இடத்திற்கு முன்னேறினார் அதானி
மேலும், புதிய தலைமுறை இளைஞர்களை பணிக்கு அமர்த்தும் முயற்சியாக விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறும் திட்டத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
அதன்படி, 40 வயதைக் கடந்தவர்கள், ஏர் இந்தியாவில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றதுடன் வருகிற ஜூலை 31 ஆம் தேதிக்குள் திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் எனவும் நிறுவனத்தின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது ஏர் இந்தியாவில் 4,500 பேர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நிறுவனத்தில் 12,085 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் நிரந்தர ஊழியர்கள் 8,084 பேர். ஒப்பந்த ஊழியர்கள் 4,001 பேர்.