கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தனது தில்லி பயணத்தின் போது பேசுவேன் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தில்லிக்கு செல்கிறார்.
நேற்று (ஜூலை 20) இரவு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “ நான் வருகிற ஜூலை 24 அன்று தில்லிக்கு புறப்பட உள்ளேன். அங்கு ஜூலை 25 அன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளேன். கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் அமைச்சரவை குறித்து கேள்வியெழுப்பினால் அவர்களிடம் நான் அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசுவேன். மேற்கு தொடர்ச்சி மலை குறித்து கஸ்தூரி ரங்கன் குழு கொடுத்துள்ள அறிக்கை குறித்து ஆலோசிக்க என்னுடன் அரசுப் பிரதிநிதிகள் உடன் வருகின்றனர். கஸ்தூரி ரங்கன் அறிக்கை பல அரசுப் பிரதிநிதிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இது குறித்து சட்ட ரீதியாக அணுகவும் அவர்கள் தயாராக உள்ளனர்.” என்றார்.
இதையும் படிக்க:காங்கிரஸ் போராட்டம்: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சரவையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு வருவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் தனது தில்லி பயணத்தின் போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேச உள்ளதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.