நிதியமைச்சருக்காக காத்திருக்கிறாரா பியூஷ் கோயல்? விலைவாசி உயர்வுக்கு பதில்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 
பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்
Published on
Updated on
1 min read

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவுள்ளதாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் விலையேற்றம், ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில், அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் உள்பட 19 பேரை இடைநீக்கம் செய்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்தார். 

இதுகுறித்து பேசிய பியூஷ் கோயல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 19 பேரை இடைநீக்கம் செய்தது கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. அவர்கள் மாநிலங்களவைத் தலைவரின் கருத்துக்களை ஏற்காமல், இடையூறு செய்தனர். 

நாங்கள் விலைவாசி உயர்வு குறித்தும், ஜிஎஸ்டி குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனாவிலிருந்து விரைவில் குணமடைந்து அவைக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது இது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார் எனக் குறிப்பிட்டார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. எனினும் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், ஒரு வாரமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com