இந்தியாவின் செயல்திறனை உலக நாடுகள் பாராட்டுகின்றன: பிரதமர் மோடி

இந்தியாவின் செயல்திறனை பார்த்து உலக நாடுகள் பாராட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
லக்னௌவில் நடைபெற்று வரும் உ.பி முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழா 3.0 இல் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
லக்னௌவில் நடைபெற்று வரும் உ.பி முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழா 3.0 இல் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.


லக்னௌ: இந்தியாவின் செயல்திறனை பார்த்து உலக நாடுகள் பாராட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னௌவில் நடைபெற்று வரும் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0 இல் பங்கேற்று ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

பின்னர் அவர் பேசியதாவது: "மற்ற ஜி-20 நாடுகளை விட வேகமாக வளர்ந்து வரும் நாடாக நாம் இருக்கிறோம். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை நமது அரசு பின்பற்றி வருகிறது" என்றார்.

மேலும், எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் இப்போது உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறியவர், "கடந்த எட்டு ஆண்டுகளில், டிஜிட்டல் புரட்சியை வலுப்படுத்த உழைத்துள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்துள்ளோம், தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளோம்."என்று கூறினார்.

பாஜகவின் இரட்டை இயந்திர அரசாங்கம் மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது என்றும், அடுத்த 25 ஆண்டுகள் ‘அமிர்த காலமாக’ இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

மத்திய அரசின் சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒரு வலுவான தேசமாக உருவெடுத்துள்ளது. "ஒரே நாடு; ஒரே வரி; ஒரே ரேஷன் கார்டு" உள்ளிட்டவை அரசின் உறுதியான, தெளிவான கொள்கையின் பிரதிபலிப்பாகும். 

உலகளாவிய சூழ்நிலைகள் புதிய வாய்ப்புகளை கொண்டு வருவதாகவும், நம்மிடம் திறன்கள் இருப்பதால் உலக நாடுகளுக்கு இந்தியா நம்பகமான நண்பராக உருவெடுத்துள்ளதாகவும், இந்தியாவின் திறமை மற்றும் செயல்திறனை பார்த்து உலக நாடுகள் பாராட்டுவதாக மோடி கூறினார்.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்வதால் வரும் இளைய தலைமுறையினருக்கு அதிக பலன்கள் கிடைக்கும். 80 ஆயிரம்  கோடி முதலீடு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை கொண்டு வந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கான கதையை எழுதும்,” என்று கூறினார்.

ஏறக்குறைய 37 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் மக்கள் மீண்டும் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இது யோகி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்து பேசப்படுவதாக உள்ளது.

கங்கை நதிக்கரையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை இயற்கை வேளாண்மைக்கான தாழ்வாரமாக உருவாக்க அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப் பிரதேசம் உத்வேகம் அளிக்கும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கனவுகளுக்கு சிறகு கொடுக்கும் திறன் உத்தரப்பிரதேச இளைஞர்களிடம் உள்ளது என்றார்.

"இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தால் உங்கள் கனவுகள் நனவாகும்," என்று அவர் கூறினார்.

மேலும், முதலீட்டாளர்கள் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகை தருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

"நீங்கள் காசிக்குச் சென்று, அதன் பாரம்பரியத்தை பாதுகாத்த நகரத்தின் புதிய தோற்றத்தைப் பார்க்க வேண்டும்" என்று மோடி கூறினார்.

யோகி ஆதித்யநாத் ஆட்சியிலும், பிரதமரின் வழிகாட்டுதலிலும் மாநிலம் மாறிவிட்டது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com