உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் சிறுமி ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுகள் இருப்பதாக சந்தேகித்த மருத்துவர்கள் அந்த சிறுமியின் மாதிரியை புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
காசியாபாத்தில் சிறுமி ஒருவர் காது தொடர்பான பிரச்னைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு உடலில் இருக்கும் புண்களைப் பார்த்து அதனை குரங்கு அம்மையின் அறிகுறிகளாக இருக்குமோ என மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புணேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறுமியை பரிசோதித்த மருத்துவர் தியாகி கூறியதாவது, “ சிறுமி ஒருவர் காது தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த போது சிறுமியின் உடலில் புண்கள் இருந்தன. அவை பார்ப்பதற்கு அம்மை போன்று தோன்றியது. இருப்பினும் இது குரங்கு அம்மையா, இல்லையா என்பது சரியாகத் தெரியவில்லை. அந்த சிறுமி தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மேலும், அவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
சிறுமியை பரிசோதித்த மற்றொரு மருத்துவர் கூறுகையில், “ இது குரங்கு அம்மை போலத் தெரியவில்லை. சிறுமி அதிகமாக மாங்காய் சாப்பிட்டதான் மூலம் இது போன்ற புண்கள் உடலில் ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.
குரங்கு அம்மை ஒரு வகை அரிய நோய் ஆகும். இந்த நோய் சின்னம்மையைக் காட்டிலும் வீரியம் குறைவு. இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் உடல்களில் சிகப்புப் புள்ளிகள் தோன்றுதல், காய்ச்சல், உடல்வலி போன்றன அறிகுறிகளாகத் தென்படும். இந்த நோயினால் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.