மகாராஷ்டிரத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஜூன் 8) ஒரே நாளில் 2,700 பேருக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு மகாராஷ்டிரத்தில் ஒரு நாளில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,701 பேர் கரோனாவினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,806 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 78,98,815 ஆக உள்ளது. கரோனாவினால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,47,866 ஆக உள்ளது.
மகாராஷ்டிரத்தில் நேற்று (ஜூன் 7) ஒரே நாளில் 1,881 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 8) 2,701 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருவது மாநில சுகாதாரத் துறையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.