ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றுள்ளதாக அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அனைத்து 200 எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனர். அவையில் காங்கிரஸுக்கு 108 எம்எல்ஏ-க்கள், பாஜகவுக்கு 71, சுயேச்சைகள் 13, ராஷ்ட்ரீய லோகந்திரிக் கட்சிக்கு 2 மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய பழங்குடியின கட்சிக்குத் தலா இரண்டு எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.
இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரண்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுவிட்டதாக அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அசோக் கெலாட் பதிவிட்டுள்ளதாவது:
"ராஜஸ்தானில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களவை இடங்களை வென்றிருப்பது ஜனநாயகத்தின் வெற்றி. புதிதாகத் தேர்வாகியுள்ள மூன்று எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, முகுல் வாஸ்னிக் மற்றும் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்."
பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கன்ஷியாம் திவாரி 4-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "என்னை வேட்பாளராக்கியதற்கு மாநில மற்றும் மத்திய தலைமைக்கு நன்றியுடன் இருப்பேன். நான் 43 வாக்குகளைப் பெற்றுள்ளேன்" என்றார்.
மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.