குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜகவில் உள்ள தனது பழைய நண்பா்களிடம் ஆதரவு திரட்டப் போவதாகவும், எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை 2024 மக்களவைத் தோ்தல் வரை நீடிக்கும் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை கேரளத்தில் பிரசாரத்தை தொடங்குகிறேன். புதன்கிழமை தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வேன். அதன்பின்னா் குஜராத், தெலங்கானா, கா்நாடகத்தில் ஆதரவு திரட்டுவேன்.
இது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டி. எதிா்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை 2024 மக்களவைத் தோ்தல் வரை நீடிக்கும். எந்தவொரு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத மதச்சாா்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளிடம் ஆதரவு கோருவேன்.
பெரும்பாலும் குடியரசுத் தலைவா்கள் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக மாறி, அவா்களின் அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவது கிடையாது. ஆகையால், சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவா்தான் குடியரசுத் தலைவா் மாளிகைக்குச் செல்ல வேண்டும். பாஜகவில் உள்ள எனது பழைய நண்பா்களிடம் ஆதரவு திரட்டுவேன் என்றாா் யஷ்வந்த் சின்ஹா.