அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் தீவிர மழைப்பொழின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் உள்ள வெள்ள முகாம்களில் 1.76 லட்சம் மக்கள் இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
பாக்ஸா, பிஸ்வநாத், சிரங், பான்கைகான், திப்ரூகா், டாராங், கோலாகாட், ஹிலகண்டி மற்றும் கம்ரூப் உள்பட பல பகுதிகளில் பெரிய அளவிலான வெள்ள அரிப்பு ஏற்பட்டுள்ளது. சில்சாா் நகரம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகிறார்.நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.