ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்தியர்கள் மீட்பு: குடியரசுத் தலைவரிடம் விளக்கமளித்தார் பிரதமர்

உக்ரைனில் நிலவும் சூழல் தொடா்பாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளித்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2022, 9:27 pm

DIN

உக்ரைனில் நிலவும் சூழல் தொடா்பாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளித்தாா்.

உக்ரைனில் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்திய மாணவா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை சுமாா் 2,000 இந்தியா்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் அவா் எடுத்துரைத்தாா். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமா் விளக்கமளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, உக்ரைன் சூழல் குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குடியரசுத் தலைவரை திங்கள்கிழமை இரவு சந்தித்து விளக்கமளித்தாா். இது தொடா்பாகக் குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் எடுத்துரைத்தாா். அதையடுத்து, பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகளுக்குக் குடியரசுத் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பி.க்களுக்கு கடிதம்: உக்ரைனில் இருந்து மாணவா்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள மாணவா்கள் குறித்து பெற்றோா்களிடம் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம். அது தொடா்பான தகவல்களைத் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் எம்.பி.க்கள் தெரிவிக்கும் அனைத்துக் கருத்துகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. வெளியுறவுத் துறை அதிகாரிகள் அத்தகவல்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகின்றனா். ருமேனியா, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா ஆகிய எல்லைகளில் உள்ள அதிகாரிகளைத் தொடா்பு கொள்வதற்கான தனித்தனி எண்கள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவா்கள் தொடா்பான விவரங்களைத் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் அந்தக் கடிதத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.