கர்நாடகத்தில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்.25-ம் தேதி யத்கீர் மாவட்டத்தில் தோரணஹள்ளி கிராமத்தின் அருகேயுள்ள உள்ள ஒரு வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது சமையல் செய்யும் இடத்தில் வைக்கப்பட்ட சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதில், பலத்த காயமடைந்த 14 பேர் கலபுர்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலர் இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த இந்த சம்பவத்தில் 18 மாத குழந்தை மஹந்தேஷ், மூன்று வயது ஆத்யா, நிங்கம்மா (85) ஆகியோர் உயிரிழந்த நிலையில், கங்கம்மா (50) சனிக்கிழமையும், ஸ்வேதா (6) திங்கள்கிழமையும் தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழந்த 5 பேர் வீரபசப்பா (28), பீமராய(78), கல்லப்பா லக்கஷெட்டி (50), சன்னவீர மைலகி (30), சன்னப்பா (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து விஜய் கேஸ் ஏஜென்சியின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.