மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117-ல் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி, ஆட்சியைப் பிடிக்கிறது.
இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் வெற்றி குறித்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ‘மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனுக்குச் செல்லாத இந்தியாவைப் உருவாக்குவோம். நான் தீவிரவாதி அல்ல தேசபக்தன் தான் என்பதை நிரூபித்த பஞ்சாப் மக்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் ‘ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு நாம் நம்முடைய அமைப்பை மாற்றவில்லை என்றால் எதுவும் நடக்காது என பகத் சிங் ஒருமுறை சொன்னார். துரதிர்ஷ்டவசமாக கடந்த 75 ஆண்டுகளில், இந்தக் கட்சிகளும் தலைவர்களும் அதே பிரிட்டிஷ் அமைப்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்தனர், பள்ளிகள்,மருத்துவமனைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆம் ஆத்மி அந்த அமைப்பை மாற்றியுள்ளது’ எனக் கூறினார்.