கொல்கத்தா: சர்வதேச கொல்கத்தா புத்தகக் காட்சியில் பலரின் கவனத்தை திசைதிருப்பி, திருட்டில் ஈடுபட்ட தொலைக்காட்சி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருப்பவர் ரூபா தத்தா. இவர், கொல்கத்தா புத்தகக் காட்சியில் திருடிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று, புத்தகக் காட்சியில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர், ரூபா தத்தா ஒரு பர்சை குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் போது பார்த்துவிட்டார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு கையும் களவுமாக பிடித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
பிறகு அவரிடம் விசாரணை நடத்தியதில், அவரின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், அவரின் உடைமைகளை பரிசோதித்ததில், அவரது பையில் ஏராளமான பர்ஸ்கள் இருந்ததும், ரூ.75,000 ரொக்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
புத்தகக் காட்சியில் பங்கேற்க வந்தவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் பர்ஸ் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.