உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொலை மிரட்டல்...ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்த கர்நாடக அரசு

தலைமை நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விடியோ ஒன்று தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டதாக வழக்கறிஞர் உமாபதி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் சீருடை பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைமை நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விடியோ ஒன்று தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டதாக வழக்கறிஞர் உமாபதி குறிப்பிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வழக்கறிஞர் உமாபதி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில், "காலை 9:45 மணியளவில் வாட்ஸ்அப்பில் விடியோ ஒன்று எனக்கு அனுப்பட்டிருந்தது. அந்த விடியோவில் இருப்பவர்கள் தமிழ் மொழியில் பேசினார்கள்.

ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்ததையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிறரைக் குறிவைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். 
 
இந்த விடியோவில் உள்ளவர் தமிழ்நாட்டில் (அநேகமாக மதுரை மாவட்டம்) ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவது போல தோன்றுகிறது, ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்து செல்லும் போது நீதிபதி கொல்லப்பட்டதைப் பற்றி அந்த நபர் விடியோவில் குறிப்பிடுகிறார்.

அதேபோன்று, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தலைமை நீதிபதி எங்கு நடைபயிற்சி மேற்கொள்வார் என்பது தெரியும் என அந்த நபர் கூறியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹிஜாப் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி உள்பட மூன்று நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாகவே, ஹிஜாப் அணிவது பெரும் சர்ச்சையாக மாறியது. கர்நாடகத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு சில ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அங்கு பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு கட்டுப்பாடு விதித்தது. இதை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை அல்ல என கருத்து தெரிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com