

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
இந்தூரில், விஜய் நகர்ப் பகுதியின் ஸ்வார்ன் பாக் காலனியில் மூன்று மாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் ஆணையாளர் ஹரி நாராயண் சாரி மிஸ்ரா கூறுகையில்,
இன்று அதிகாலை திடீரென இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கட்டடத்தில் பல குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ள கட்டடத்தில் நடந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து டிசிபி சம்பத் உபாத்யாய் கூறுகையில்,
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, கட்டடத்தின் தரைதளத்திலும், படிக்கட்டுகளிலும் உள்ள பிரதான கதவைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் தீ மற்றும் கரும் புகையால் சூழப்பட்டது. அதே நேரத்தில் மூன்றாவது மாடியிலிருந்து மேல் தளத்துக்குச் செல்லும் கதவு மிகவும் அனல் அடித்ததால், பெரும்பாலானோர் கட்டடத்திற்குள் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தங்கள் குடியிருப்புகளின் பால்கனிக்கு விரைந்தனர். தீயை அணைப்பதற்கு கட்டடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனத் தெரிய வந்தது.
மின்சார மீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர், சம்பவம் நடந்தபோது கட்டடத்தில் சுமார் 16 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டடத்தின் உரிமையாளர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 304 கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதியில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.