‘எங்களால் சுவாசிக்க கூட முடியவில்லை’: கலக்கத்தில் தில்லிவாசிகள்!

மோசமான காற்றின் தரத்தால், தலைநகர் தில்லியில் வசிக்கும் மக்கள் சுவாசிக்க கூட முடியவில்லை என்று புலம்புவது பேராபத்தை உணர்த்துகிறது.
தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு
தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு
Published on
Updated on
1 min read


மோசமான காற்றின் தரத்தால், தலைநகர் தில்லியில் வசிக்கும் மக்கள் சுவாசிக்க கூட முடியவில்லை என்று புலம்புவது பேராபத்தை உணர்த்துகிறது.

தில்லியில் கடந்த இரு வாரங்களாகவே மீண்டும் காற்று மாசுப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தில்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து காற்றின் தரமானது ‘மிக மோசம்’ பிரிவில் உள்ளது.

இதனால், கட்டுமானப் பணிகளை மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக நிறுத்த வைக்கக் கோரி தில்லி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளை உடனடியாக மூடக் கோரி குழந்தைகள் நல வாரியமும் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, தில்லி தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 10இல் 8 பேருக்கு சுவாசக் கோளாறு உள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்று மாசு குறித்து தில்லி புறநகரான நொய்டாவை சேர்ந்த அர்ஜூன் கூறுகையில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விற்க அரசு தடை விதித்திருந்தது. ஆனால், கள்ளச் சந்தையில் பட்டாசுகள் விற்கப்பட்டதன் விளைவு, தீபாவளிக்கு பின்பு கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. சுவாசிக்க கூட கடினமாக இருக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மற்றொருவர் கூறுகையில், இன்று காலை சாலைகளில் அடர்த்தியான புகைமூட்டம் நிலவியது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், யாரும் பின்பற்றுவதில்லை. தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதித்தும், பெரும்பாலானோர் பட்டாசுகளை வெடித்தனர். காலையில் நடைபயிற்சிக்கு வந்தால், தொண்டை, கண்கள் எல்லாம் எரிகிறது என்றார்.

மேலும், பள்ளி மாணவர் ஒருவர், “தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதை போன்று பள்ளிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தனியார் வாகனங்களின் பயன்பாடு குறையும்” என்றார்.

தொடர்ந்து, காற்று மாசானது தில்லி மட்டுமின்றி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் பாதித்து வருவதால், உடனடியாக காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com