மோா்பி பாலம் விபத்து வழக்கு: ஒரேவா நிறுவனத்தின் பெயரை சேர்க்காதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

மோா்பி பாலம் விபத்து வழக்கு: ஒரேவா நிறுவனத்தின் பெயரை சேர்க்காதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

குஜராத் மோா்பி பாலம் விபத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
Published on

குஜராத் மோா்பி பாலம் விபத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலம் விபத்து வழக்கில் ஒரேவா நிறுவனத்தின் பெயரை சேர்க்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத்தின் மோா்பி நகரில் மச்சு ஆற்றில் நூற்றாண்டு பழைமையான தொங்கு பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு நாளான கடந்த 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. 

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (அக்.31) மாலை இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது, திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்தது. இதில், 141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் மோா்பி பாலம் இடிந்து விழுந்தது மிகப்பெரிய ஊழலின் விளைவாகும் என்றும், முதல்வா் பூபேந்திர படேல் பதவி விலக வேண்டும், உடனடியாக சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும், பாலம் கட்டுவதில் அனுபவமே இல்லாத வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தை ஏன் வேலை செய்ய அனுமதித்தாா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. 

இந்நிலையில்,  மோா்பி பாலம் விபத்து வழக்கில் கடிகாரம் மற்றும் இ-பைக் தயாரிப்பு நிறுவனமான ஓரேவா நிறுவனத்தின் பெயரை சேர்க்காதது ஏன்? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,” மோர்பி பாலத்தை மறுசீரமைத்த ஒரேவா நிறுவனத்தின் உரிமையாளர் பெயர், நகராட்சி அதிகாரிகளின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறாதது ஏன்?, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஏன் பதவி விலகவில்லை?

விபத்து குறித்து கேள்வி எழுப்பினால் அது சோகத்தை அதிகரிப்பதாக அர்த்தமா? ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்? விபத்து நடந்து 48 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இந்த கேள்விக்கு பாஜகவும், குஜராத் மாநில அரசும் இன்னும் பதிலளிக்கவில்லையே ஏன் ?” என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலம் கட்டுவதில் அனுபவமே இல்லாத மோா்பியை அடிப்படையாகக் கொண்ட கடிகாரம் மற்றும் இ-பைக் தயாரிப்பு நிறுவனமான ஓரேவா நிறுவனத்திற்கு மோா்பி நகராட்சி மூலம் 15 ஆண்டுகளாக மோசமான தொங்கு பாலத்தை சரிசெய்து இயக்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன் பயன்பாட்டிற்கு ரூ.10 முதல் ரூ.15 வரை டிக்கெட் வசூலிக்கப்பட்டது நகராட்சி ஆவணங்கள் மதிப்பிடப்பட்டதில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com