2022 ஆம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் எனும் சிறந்த கவன ஈர்ப்புச் சித்திரம் போட்டிக்கான வெற்றியாளரை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி என்ற சிறுவன், 'இந்தியா ஆன் தி சென்டர் ஸ்டேஜ்' என்ற டூடுலுக்காக இந்தியாவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்திற்கான போட்டியையும் நடத்தி வருகிறது.
2022 ஆம் ஆண்டு இந்தியாவில் கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெற்றியாளராக கொல்கத்தாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் இன்று (நவம்பர் 14) கூகுளில் இடம்பெற்றுள்ளது.
'அடுத்த 25 ஆண்டுகளில், எனது இந்தியா....' என்ற கருப்பொருளில் உருவாக்கியுள்ள தனது சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் குறித்து ஷ்லோக், 'அடுத்த 25 ஆண்டுகளில், இந்திய விஞ்ஞானிகள், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக நட்புரீதியான ரோபோவை உருவாக்குவார்கள். பூமியிலிருந்து விண்வெளிக்கு இந்தியா பல பயணங்களை மேற்கொள்ளும். யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் மேலும் வளரும். வரும் ஆண்டுகளில் இந்தியா மேலும் வலுவடையும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கூகுள் நடத்திய இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளிடமிருந்து 1,15,000 க்கும் மேற்பட்ட படைப்புகள் பெறப்பட்ட நிலையில் ஷ்லோக் உருவாக்கிய சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றிப் பரிசாக, கல்லூரி உதவித்தொகையாக ரூ. 5 லட்சமும் பள்ளியில் தொழில்நுட்ப உதவிக்காக ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 7 லட்சம் வழங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: புற்றுநோய்க்குக் காரணமாகும் வைட்டமின் மாத்திரை!